ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த சதி அமெரிக்கா எச்சரிக்கை..!
ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.
இதையடுத்து ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்கள் கடத்தி ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு விமானங்கள் இயக்கும் ஏர்லைன்ஸ் நிறுவ னங்களுக்கு அவசர தகவல் அனுப்பி உள்ளனர். அதில், ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் சிறுசிறு வெடிபொருள் கருவிகளை கடத்தி, விமானத்திலேயே அவற்றை அசம்பிள் செய்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, சோச்சி நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.