திருவானைக்காவலில் தை தெப்ப உற்சவம்...!



திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் ஸ்தலமாக விளங்குகிறது. கோயிலில் தை தெப்ப உற்சவ திருவிழா 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் திருநாளான நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்த பின் புறப்பாடு நடந்தது.

சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் மரக்கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சன்னதி வீதி வழியாக ராமதீர்த்த தெப்பக்குளம் வந்து சேர்ந்தனர். தெப்ப மிதவையில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். தெப்பக்குளத்தில் 3 முறை வலம் வந்து மைய மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமியும், அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் மீண்டும் சன்னதி தெரு வழியே சென்று தேரோடும் வீதியாகிய 4ம் பிரகாரம் வலம் வந்து நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கண்ணையா மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.