கண்ணீருக்கு பதிலாக கல் மழை பொழியும் அதிசய சிறுமி...!!!



ஏமன் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி கண்ணீருக்கு பதிலாக கல் மழை பொழியும் அதிசயம் அந்நாட்டு மக்களுடன் சேர்த்து மருத்துவர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏமனின் மேற்கு ஹொடைடா மாகாணத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது சாலே அல் ஜஹாராணி. 2 மனைவிகளின் மூலம் 20 பிள்ளைகளுக்கு தந்தையான இவரது 8 வயது மகள் சாடியா அல் ஜஹாராணி. இவ்வளவு காலமும் சராசரி சிறுமியாக இருந்த இவள் மீது தற்போது உலக ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது.

கடந்த 15 நாட்களாக இவளது விழிகளில் இருந்து சின்னச் சின்ன சரளை கற்கள் கண்ணீர் போல கொட்டத் தொடங்கியுள்ளது. இதை கண்டு பதறிப்போன சாடியாவின் தந்தை டாக்டர்களிடம் அழைத்து சென்று எவ்வளவோ மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தும், இந்த விசித்திர நோய்க்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என அவர்கள் கை விரித்து விட்டனர்.

பகலில் மட்டும் தான் இதைப் போன்று கண்ணீர் துளிகளுக்கு பதிலாக தொடர்ந்து கற்கள் கொட்டுவதாக முஹம்மது சாலே அல் ஜஹாராணி கூறுகிறார். மேற்கொண்டு மருத்துவ செலவு செய்வதற்கு தன்னிடம் பண வசதி இல்லை என புலம்பும் இவர், தனது மற்ற பிள்ளைகள் யாருக்கும் இதைப்போன்ற பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.